×

ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பரிதாப பலி: இருவர் படுகாயம்

செய்யூர்: செய்யூர் அருகே உழவு ஓட்டி விட்டு ஏரிக்கரையில் வந்த டிராக்டர், திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருக்கழுக்குன்றம் இரும்புலிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (20). இவருக்கு சொந்தமான டிராக்டர் மூலம் பல்வேறு பகுதிகளில் விவசாய வேலைகளை செய்து வந்தார். நேற்று காலை நவீன், நீலமங்கலத்தில் உள்ள தனது உறவினர் விவசாய நிலத்தில் உழவுப்பணியை மேற்கொள்ள சென்றார்.

சுமார் 11 மணியளவில் உழவு பணியை முடித்து கொண்டு, டிராக்டரில் அவரது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு (20), டிஷா (13), ஹரி (20) ஆகியோரை ஏற்றிக் கொண்டு ஏரிக்கரை மேல் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது டிராக்டர், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கரையில் இருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நவீன், மகாவிஷ்ணு ஆகியோர் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். டிஷா, ஹரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை பிரேத பரிசோதனைக்ககாக மதுராந்கதம் அரசு மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : teenagers ,lake ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு