×

பழைய மாமல்லபுரம் சாலையின் நடுவில் தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலை தடுப்புகள்: பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலையின் நடுவில், தரமற்ற முறையில் சாலை தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதனை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். திருப்போரூரில் இருந்து பூஞ்சேரி சந்திப்பு வரை பழைய மாமல்லபுரம் சாலையின் நடுவில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக சாலையின் நடுவே 1 அடி உயரத்தில் சாலைத்தடுப்பு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சாலை அமைக்கப்பட்டதால் சாலை தடுப்பு மறைந்து இரு பக்க சாலைகளும் ஒன்றாக காட்சி அளித்தன. மேலும், சாலையின் நடுவில் தடுப்பு இல்லாததால் பல வாகன ஒட்டிகள் பல்வேறு இடங்களில் தங்களது வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக திருப்பிக் கொள்ளும் நிலையும் உருவானது.

இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் தடுவே 4 அடி உயர கான்கிரீட் சாலைத்தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, தடுப்புகள் அமைக்கும் பணி கடந்த 1 மாதமாக நடந்து வருகிறது. கருங்குழிப்பள்ளம், ஆலத்தூர், பையனூர் ஆகிய இடங்களில் அலுமினிய தகடுகளாலும், திருப்போரூர், தண்டலம் பகுதிகளில் கான்கிரீட்டாலும் தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது. கான்கிரீட் அமைக்கும் போது கீழே சிறிதளவு பள்ளம் தோண்டி இரும்பு கம்பிகளை கட்டி கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும்.

ஆனால், இப்பணியை டெண்டர் எடுத்த தனியார் ஒப்பந்ததாரர்கள், அதனை முறையாக செய்யாமல், ஏற்கெனவே உள்ள தார் சாலையின் மீது நேரடியாக கம்பிகளை வைத்து சிமென்ட் கான்கிரீட்டை கொட்டி தடுப்பு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பார்த்த தண்டலம் கிராம பொது மக்கள் இந்த அரைகுறை பணியை தடுத்து நிறுத்தினர். முறையாக சாலையின் நடுவே பள்ளம் தோண்டி கம்பிகளை கட்டி கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இதையடுத்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : road ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ