தென்காசி, டிச. 27: கொரோனா பரவலால் பட்டாசு வியாபாரம் 20 சதவீதம் குறைந்துள்ளதாக விற்பனையாளர் சங்க மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் வேதனையுடன் தெரிவித்தார். பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. மாவட்ட கவுரவத் தலைவர் இப்ராஹிம், அல்லித் துரை, கண்ணன், சங்கரநாராயணன் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபிருல் ரிபாய், மாநிலசெயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட செயல் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநில பொருளாளர் கந்தசாமி ராஜன், மாநில துணை தலைவர்கள் ராஜசேகரன், வல்லப கணேசன், ரவி, ராஜேந்திரன், மாநில இணைச்செயலாளர் கண்ணன், மாநில துணைச்செயலாளர்கள் சிவராமன் வீரப்பன், பிரபாகரன், திருப்புகழ் ராஜா, மாநில துணை பொருளாளர் பாண்டியராஜன், தென்காசி மாவட்டத் தலைவர் பால்ராஜ், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் பக்கீர் மைதீன், துணைச்செயலாளர் ரமேஷ், இணைச்செயலாளர் பாலகுமார் பேசினர்.
கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு மாநிலத் தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா பரவலால் அனைத்து தொழில்களைப் போல் பட்டாசு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் பட்டாசு வியாபாரம் 20 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 5 ஆண்டுகளுக்கு நிரந்தர உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பட்டாசு விற்பனை உரிமத்தை புதுப்பித்தலில் உள்ள சிக்கலை எளிமையாக வேண்டும். தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமத்தை 1 மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் உள்ள பட்டாசு கடைகளுக்கு நிரந்தர உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.