தஞ்சை, டிச.27: தஞ்சை மாநகராட்சி பகுதியில் பிரதம மந்திரி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டம் மூலம் மாநகரில் உள்ள நலிவடைந்த சாலையோர பதிவுபெற்ற, பதிவு பெறாத வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கிகள் மூaலம் மாநகராட்சி பரிந்துரையின்பேரில் ரூ.10 ஆயிரம் கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு லோன் மேளா நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக பயனாளிகளுக்கு கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாநகரில் உள்ள தகுதியுள்ள பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து சாலையோர வியாபாரிகளும் தங்களின் ஆதார் அட்டை, பேங்க் பாஸ் புத்தகம், ரேசன் ஸ்மார்ட் கார்டு, 2 புகைப்படங்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பம் செய்யலாம். பூமாலை வணிக வளாகம், காந்திஜி ரோடு, அண்ணா நூற்றாண்டு மண்டபம், ஆர்எம்எச் ரோடு ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.