வேலூர், டிச.26: வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு நடந்த கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தேவாலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குழந்தை யேசுவின் பிறப்பை விளக்கும் வகையில் அலங்கார பொம்மைகளுடன் குடில் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் மகிழும் வகையில் கிறிஸ்துமஸ் மாஸ்க் பொம்மைகள் மற்றும் பிரத்யேக விளையாட்டு அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதிகாலை முதலே கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் விண்ணரசி மாதா பேராலயத்தில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலை ஏராளமானவர்கள் வந்து தரிசித்து சென்றனர். அதேபோல் ஆரோக்கிய மாதா பேராலயம், பெந்தகோஸ்தே, கத்தோலிக் சிரியன், ஆங்கிலிக்கன் என்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஜெபக்கூடங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து தேவாலயங்களுக்கு வந்தவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்தவ பாடல்களுடன் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்பு மற்றும் குழந்தை யேசுவின் பிறப்பும் அதனால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அப்பம், மற்றும் திராட்சை ரசம் வழங்கப்பட்டது.