ஆத்தூர், டிச.26: ஆத்தூர் அருகே முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா, முட்டல் ஏரி, ஆனைவாரி நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலமாக உள்ளது. பூங்கா, ஏரி மற்றும் நீர்வீழ்ச்சியை காணவும், இயற்கை அழகை ரசிக்கவும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தொடர் மழையால் கல்வராயன் மலை பகுதியில் உள்ள சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஆனைவாரி நீர்வீழ்ச்சி, ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று வனத்துறையினர் சுற்றுச்சூழல் பூங்கா, ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தொடர் மழையால், மூடப்பட்ட சுற்றுலா பூங்கா, ஏரி மற்றும் நீர்வீழ்ச்சிகளில், தற்போது சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை அனுமதித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுற்றுலா மையத்திற்கு வரும் பொதுமக்கள், உடல் பரிசோதனை, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து அனுமதிக்கப்படுவார்கள். படகு சவாரி, பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது,’ என்றனர். முதல் நாளான நேற்று 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்தும் மகிழ்ந்தனர்.