×

உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, டிச. 26: உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், விவசாயி. இவரது மகள் சமீரா (8), மகன் யோகேஷ் (6). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் இதே கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் 2 பேரும் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெற்றோர், 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து எடைக்கல் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குளத்தை சுற்றி கம்பி வேலை அமைக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரையில் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைந்து குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,Thampi ,Pali ,Ulundurpet ,village ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...