×

மதுரைக்கு கடத்த முயன்ற 125 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் சேல்ஸ்மேன் உட்பட 4 பேர் கைது

பரமக்குடி, டிச.26: பரமக்குடியில் இருந்து மதுரைக்கு  லாரியில் கடத்த முயன்ற 125 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சேல்ஸ்மேன் உட்பட நான்கு பேர்  கைது செய்யப்பட்டனர்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ நாதன் தலைமையிலான போலீசார் பார்த்திபனூர் சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மதுரையிலிருந்து வந்த கொரியர் லாரியில் லோடுமேன்கள் சிலர் கையில் சாக்குகளுடன் இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இதில் பரமக்குடி அருகே  வேந்தோணி என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை  மதுரைக்கு லாரியில் கடத்த இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வேந்தோணி பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் அளவிலான 125 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட  எமனேஸ்வரம் ரேஷன் கடை விற்பனையாளர் முத்துக்குமார்(45), மாரியப்பன், ராமகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் கமுதக்குடி அரசு நுகர்வோர் கழக  கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : persons ,salesman ,Madurai ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில்...