×

மின்கசிவால் 2 கூரை வீடுகள் சாம்பல் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருவையாறு, டிச. 25: திருவையாறு திருமஞ்சன வீதியை சேர்ந்த லட்சுமணன் (52). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே தெருவை சேர்ந்த கண்ணா (45) என்பவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளர்களான இருகுடும்பத்தினரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று 2 குடும்பத்தினரும் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது குழந்தைகள் பக்கத்து தெருவில் விளையாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் லட்சுமணன் வீட்டில் மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள கண்ணா வீடும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து திருவையாறு தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 2 வீடுகளிலும் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன், நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய தலைவர் அரசாபகரன ஆகியோர் வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் வந்து அரசு நிவாரணமாக 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000, வேட்டி, புடவை, அரிசி வழங்கினார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...