×

அங்கலகுறிச்சி துணை மின்நிலையத்தில் தீ விபத்து

ஆனைமலை, டிச.25: அங்கலகுறிச்சி துணை மின்நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. பொள்ளாச்சியை  அடுத்த அங்கலக்குறிச்சியில் அமைந்துள்ள துணை மின்நிலையத்துக்கு, ஆழியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் மற்றும் பொள்ளாச்சி மின்நிலையத்தில் இருந்து மின் பகிர்வு நடைபெறுகிறது. இங்கிருந்து கோட்டூர், அங்கலகுறிச்சி, மலையாண்டிப்பட்டணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரை சித்தூர், ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த துணை மின்நிலையத்தில் நேற்று 22 கே.வி. திறனுடைய மின்சார மீட்டர் வெடித்து தீப்பற்றியது. அருகில் இருந்த மின் ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், மின்சார மீட்டர் சேதம் அடைந்தது.

இதனால், அங்கலக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கலக்குறிச்சி துணை மின் நிலைய செயற்பொறியாளர் (பொறுப்பு) வரதராஜன் உடனடியாக மின் மீட்டரை மாற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மின்சார மீட்டர் மாற்றப்பட்டு ஒரு மணி நேரத்தில் மின் விநியோகம்  சீரமைக்கப்பட்டது.

Tags : substation ,Angalkurichi ,
× RELATED துணை மின்நிலையம், கால்நடை பண்ணை கட்டிடம் திறப்பு