- சூரசமஹரம்
- குலசை தசரா விழா
- குலசேகரப்பட்டினம் தசரா விழா
- தசரா விழா
- குலசேகரபட்டினம் முத்தராமன் கோயில்
- திருச்செந்தூர்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி வரும் அக்.2ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற இருக்கும் நிலையில், பலவகையான வேடம் அணிந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடம் வலம்வர தொடங்கியுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 2ம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள ஊர்களில் தசரா குழுவினரின் ஆட்டம் கலைக்கட்டியுள்ளது.
பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக காளி, முருகன், விநாயகர், கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட கடவுளின் வேடங்களையும், குரங்கு, கரடி, சிங்கம் போன்ற விலங்குகளின் வேடங்களும், ராஜா, ராணி, குறவன், குறத்தி, பூதம் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து மேள, தாளங்கள் முழங்க வேடமணிந்த பக்தர்கள் இசைக்கு ஏற்ப நடனமாடி காணிக்கை வசூலில் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினர் உள்ளிட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் திருவிழாவாக பார்க்கப்படும் இந்த விழாவிற்காக ஆண்டுக்கு ஆண்டு வேடமணிந்து குலசை வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
