ராமேஸ்வரம், டிச.24: ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் பக்தர்கள் தீர்த்தம் குளிக்க கோயில் நிர்வாகம்அனுமதிக்க வலியுறுத்தி பா.ஜ.கட்சியினர் ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா பரவல் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு கடந்த மார்ச் 24ம் தேதி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்ட தடை இன்று வரை தொடர்கிறது. இதனால் பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கும பணியில் ஈடுபடும் யாத்திரை பணியாளர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை திறந்து பக்தர்கள் நீராட அனுமதிக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரத்தில் பா.ஜ. கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் நகர் தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளீதரன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் குப்புராம், தமிழக செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.