×

கொள்ளை கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது: டி.ஆர்.பாலு பேச்சு

ஆவடி, டிச.24:  ஆவடி அடுத்த நடுக்குத்தகை ஊராட்சி திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் கே.ஜெ.ரமேஷ் வரவேற்றார்.

இதில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:
திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் சுய உதவி குழு அமைத்தல், உள்ளாட்சிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் என கணக்கில் அடங்காத பல மக்கள் நலத்திட்டங்களை  கருணாநிதி செயல்படுத்தினார். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் பல கோடி ஊழல்கள் செய்துள்ளனர். மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து 97 பக்கங்கள் கொண்ட ஊழல் பட்டியலை ஆதாரப்பூர்வமாக கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளை கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது. வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். இன்னும் 120 நாட்களில் தமிழகத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர்வது நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.
இதில், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், பூந்தமல்லி ஒன்றிய செயலாளருமான டி.தேசிங்கு, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பூவை ஜெரால்டு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.ராஜி, பூந்தமல்லி ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ், ஊராட்சி தலைவர் லெட்சுமி, துணைத் தலைவர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Balu ,bandits ,talks ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...