×

மின்சாரம் பாய்ந்து பசு பரிதாப பலி

செய்துங்கநல்லூர், டிச. 24:  கீழ வல்லநாடு முருகன்புரத்தைச் சேர்ந்த விவசாயி வேலாயுதம்(45). இவர் வீட்டில் 10 பசுக்களை வளர்த்து வந்தார். மாடுகள் நேற்று மதியம் அருகேயுள்ள வயல்பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு மின்கம்பி அறுந்து கிடந்தது. அங்கு மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பசு எதிர்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த ஊழியர்கள் வந்த மின் இணைப்பை துண்டித்து மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த தெய்வச்செயல்புரம் கால்நடை உதவி மருத்துவர் ஆனந்தராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகு குழி தோண்டி புதைத்தனர்.
இதுகுறித்து வேலாயுதம் கூறுகையில், மின்வாரியத்தினரின் அலட்சியப் போக்கால் எனது பசு இறந்தது. இதுபோன்ற சம்பவத்தால் கால்நடைகள் மட்டுமின்றி எங்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை. எனவே மின்வாரியம் எனக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு