தக்கலை, டிச. 24: தக்கலை அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகிறார்கள். தக்கலை அருகே உள்ள தென்கரை தோப்பு செடி தோட்டத்து விளையை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பிரியா (25). இவரது வீட்டில் சுவரோடு சேர்ந்து புலியூர்குறிச்சி தோப்பை சேர்ந்த வேலப்பன் என்பவர் சாணி கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பிரியா தரப்பில் தென்கரை ஊராட்சியில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரியா தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது வேலப்பன் தகாத வார்த்தைகளால் பேசி பிரியாவை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரியா தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வேலப்பன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.