×

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு

காஞ்சிபுரம், டிச.24: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நேற்று  காலை கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பச்சை துண்டு அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டு கலந்துரையாடினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில்  டிசம்பர் 23ம் தேதி முதல் 10 நாட்களுக்கு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நேற்று காலை 10 மணியளவில் கிராமசபை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறி உரையாற்றினார்.

மேலும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு கலந்துரையாடினார். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், ஜார்ஜ், சிவபாதம், ஒன்றிய அமைப்பாளர்கள் குண்ணம் ராமமூர்த்தி, சேகண்டி பாலா, மண்ணூர் சரவணன், போஸ்கோ, துணை அமைப்பாளர்கள் சந்தவேலூர் சத்தியா, மேட்டுபாளையம் சூர்யா, ஒன்றிய - நகரச் செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, படப்பை மனோகரன், ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, ஜெ.சண்முகம், டி.பாபு, வே.கருணாநிதி, எஸ்.நரேந்திரன், இரா.நரேஷ் கண்ணா, ப.ரவி, பையனூர் எம்.சேகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சானிடைசர் மூலம் கைகழுவி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குன்னம் கிராமத்தில் பொதுமக்கள் வீடுகள்தோறும் வாசலில் செங்கரும்பு கட்டி, தோரணங்கள் அமைத்து உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையான கத்திப்பாராவில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : meeting ,MK Stalin ,Sriperumbudur Union Village Council ,Kunnam Panchayat ,DMK ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...