×

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

ேகாவை, டிச.24: கோவை மாவட் டத்தில்  கொரோனா விதிமுறைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனை தேவாலயங்களில் நடக்கிறது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் நாளை சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆராதனையை கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
அதன்படி, இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் வழிபாட்டு பாடல் நடக்கிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேடையில் இருந்து குழந்தை ஏசுவை குடிலில் கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கிறது. பின்னர், கூட்டு பிராத்தனை நடக்கிறது.

இதேபோல புலியகுளம் புனித அந்தோணியர் ஆலயம், 4-ம் நம்பர் புனித பாத்திமா அன்னை தேவாலயம், ரத்தினபுரி புனித சின்னப்பர் தேவாலயம், புரூக்பாண்ட் சாலையில் உள்ள சிரியன் சர்ச், அத்திப்பாளையம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கோவைப்புதூர் புனித குழந்தை ஏயேசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும், சிறப்பு ஆராதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் ஜான் குணசீலன் தலைமையிலும், ஆல் சோல்ஸ் சர்ச்சில் ஆயர் சார்லஸ் தலைமையிலும், இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் ராஜா பாஸ்கர் தலைமையிலும், காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்னபாஸ் தலைமையிலும், சுந்தராபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் வசந்தகுமார் தலைமையிலும் நாளை அதிகாலை சிறப்பு ஆராதனை நடக்கிறது. இதேபோல கோவையில் போத்தனூர், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை, கோவைப்புதூர், பேரூர், டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் கிறிஸ்துமஸ் ஆராதனை, நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. ஒரு இருக்கையில் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது.

Tags : churches ,Christmas ,
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து