×

திருவாரூர் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் துவக்கம்

திருவாரூர், டிச.23: திருவாரூர் நகராட்சி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. திருவாரூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மா நிர்பா நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த திட்டத்தில் எளிய தவணையில் வங்கி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 2வது கட்டமாக தொழிலாளர்களிடம் கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரையில் 3 நாட்களுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்றது. இதனையொட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் இருந்துவரும் வரிவசூல் மையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அலுவலர்கள் மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே முதற்கட்டமாக விண்ணப்பம் அளித்த 18 பேர்களுக்கு நேற்று நகராட்சி அலுவலகத்தில் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி கமிஷ்னர் (பொ) சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர அமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் வங்கி அதிகாரிகள் கடன் தொகையை பயனாளிகளுக்கு வழங்கினர்.

இதுகுறித்து கமிஷ்னர் சரவணன் கூறுகையில், இந்த திட்டதின் மூலம் திருவாரூர் நகராட்சி பகுதியில் மொத்தம் 740 பேர்களுக்கு கடன் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரையில் 210 பேர்களுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுவரையில் 540 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு கமிஷ்னர் (பொ) சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Launch ,roadside traders ,Thiruvarur Municipality ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!