சென்னை: கே.கே.நகர் பொன்னம்பலம் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி (31). இவரது வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விடப்படும் என போர்டு வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒரு வாலிபர், வாடகைக்கு வீடு வேண்டும், என்று கேட்டுள்ளார். இதனால், ப்ரீத்தி அவரை அழைத்து சென்று வீட்டை சுற்றிக்காட்டி உள்ளார். அப்போது, அந்த வாலிபர் திடீரென ப்ரீத்தி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த அவர், அந்த வாலிபரை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ப்ரீத்தி வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவலறிந்து வந்த கே.கே.நகர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டனர். மேலும் உயிருக்கு போராடிய ப்ரீத்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கே.கே.நகர் பானு நகரை சேர்ந்த பார்த்திபன் (30) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.