காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காஞ்சிபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நவரத்தின விழா சங்க தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது. லாரி உரிமையாளர் போராட்டத்துக்கு அரசு உடனடியாக தலையிட்டு, பொதுமக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். பண்டிகை காலங்களில் விலையேற்றம் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வியாபாரிகளின் நலன் கருதி வடிவமைக்கப்படும் செயல்திட்டங்களை பொறுத்து வியாபாரிகளின் ஆதரவு இருக்கும் என்றார்.