வால்பாறை, டிச.23: வால்பாறை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் சிறு விவசாயிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தேயிலை பயிரிட்டு உள்ளனர். தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தும் தேயிலை தூள் விலை கணிசமாக ரூ.80 முதல் 120 வரை உயர்ந்து உள்ளது. இதற்கு வட மாநிலங்களில் பெய்த கன மழை காரணம் என்று கூறப்படுகிறது. வட மாநில வியாபாரிகள் தென் இந்தியாவில் கொள்முதல் செய்வதால் விலை ஏற்றம் என தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை துாள் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து தேயிலை விவசாயி கூறுகையில், ‘‘பசுந்தேயிலை விலை வரலாறு காணாத உயர்வு பெற்றுள்ளது. ரூ.15, 18க்கு விற்கப்பட்ட பசுந்தேயிலை தற்போது ரூ.30 வரை விலை போகிறது. இதனால் ரூ.70 முதல் 100 வரை கிலோவிற்கு உயர்ந்து உள்ளது. விலை உயர்வு பாக்கெட் போடும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நல்ல பயன் அளித்துள்ளதாக தெரிகிறது. எங்களை போன்ற சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரிதும் லாபகரமாக இல்லை’’ என்றார்.
எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகி பால்பாண்டி கூறுகையில், ‘‘விலையேற்றத்தால் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களே சம்பாதிக்கின்றனர். தமிழகத்தில் தேயிலை தொழிலாளர்களுக்கு அறிவித்த சம்பளம் கூட வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை, பனி, மழை, வெயில், வனவிலங்கு பிரச்னைகள் நிறைந்த வாழ்கை வாழும் தொழிலாளர்களுக்கு இந்த விலை உயர்வால் எந்த பயன் இல்லை’’ என்றார்.