கடலூர், டிச. 22: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சென்ற அவர், சுனாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அவர் நான் பிரசாரம் துவங்கிய போது என்னை மக்களை சந்திக்கவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்துக்காக ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர். அப்படி வரும் முதல்வரை கேள்வி கேட்க மக்கள் தயாராக உள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. கடலூரில் மீனவ மக்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, சுனாமி குடியிப்புகளை கட்டி தந்தார். தற்போது அந்த வீடுகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
பராமரிக்க அதிகாரிகளிடம் கேட்டால் 30 முதல் 50 சதவீதம் வரை லஞ்சம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க கூறினோம். அப்போது அரசு நிதி இல்லை என்று கூறிவிட்டு, தேர்தல் வர உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வழங்கப்படுவதாக அறிவித்திருக்கின்றனர். நாங்கள் மீண்டும் கூறுகிறோம், கூடுதலாக ரூ. 2ஆயிரத்து 500 சேர்த்து ரூ. 5 ஆயிரமாக வழங்க வேண்டும். ரஜினி இன்னமும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும், என்றார். முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ உடனிருந்தார். பின்னர் பல்வேறு கட்சியிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.