அம்பத்தூர்: கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திக் (36). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில செயலாளர். நேற்று ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள். இதனால், அக்கட்சி சார்பில் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிறந்த நாள் விழா நேற்று மதியம் கொண்டாடப்பட்டது. இதில் மாநில செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். இவரது காரை, டிரைவர் மண்டபத்துக்கு பின்புறமாக நிறுத்தி விட்டு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர், அவர் சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது கார்த்திக் கார் மீது பல இடங்களில் ஆசிட் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், காரின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து காரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, காரில் ஆசிட் வீசப்பட்ட பல இடங்களில் நுரை பொங்கி காரின் மேல் பகுதி சேதமடைந்தது. புகாரின் பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா மூலமாக கார் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை தேடுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.