மதுரை, டிச. 22: சென்னையை சேர்ந்த நடராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள் மூலம் யாருடைய ஆதரவின்றி உள்ளவர்கள் பிச்சை எடுப்பதை தடுத்து, கட்டுப்படுத்தும் திட்டம் கடந்த 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. போதுமான அளவுக்கு நிதி ஒதுக்காததால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. சென்னை, மதுரை, நெல்லை, கோவை போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல நகரங்களிலும் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு சிக்னல்களில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
எனவே, பிச்சை எடுப்பவர்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு சமூக நலத்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20க்கு தள்ளி வைத்தனர்.