மதுரை, டிச. 22: கொரோனா ஊரடங்கு காரணமாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த காஸ் சிலிண்டரின் விலை கடந்த 3 மாதங்களாக, ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.660 ஆக அதிகரித்தது. இந்நிலையில், 2வது முறையாக காஸ் சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க கோரியும் மதுரை மாநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அண்ணா பஸ்ஸ்டாண்டு திருவள்ளுவர் சிலை அருகே நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் செயலாளர் சசிகலா தலைமை வகிக்க, தலைவர் ராஜேஸ்வரி, பொருளாளர் லதா, முன்னாள் கவுன்சிலர் செல்லம், நிர்வாகிகள் ஜெயராணி, மல்லிகா, பகவதி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தும், வேளாண் சட்டத்தை எதிர்த்தும், வேலை கொடு, உணவு கொடு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடு என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.