திண்டுக்கல், டிச. 22: சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனடிப்படையில், திண்டுக்கல்லில் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக காஸ் சிலிண்டரை பாடை கட்டி, சங்கு சவண்டி அடித்து ஒப்பாரி வைத்து நாகல்நகர் ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, அப்பகுதியில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழனி எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட செயலாளருமான இ.பெ.செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, நத்தம் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் யூனியன் சேர்மன் ராஜா, கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி, மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி, முன்னாள் சேர்மன் சந்திரசேகரன் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.