×

பொதுமக்கள் கோரிக்கை மழை வெள்ளத்தால் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்க கோரி வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.22: திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளை இழந்த பொதுமக்கள், கால்நடைகளை இழந்தவர்கள் உட்பட அனைவருக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் திருமார்பன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், இளம் சிறுத்தை பாசறை மாநில துணைத் தலைவர் அறவாணன், ஒன்றிய செயலாளர் உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : flood victims ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தில்...