திருவாரூர், டிச:22: காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருவாரூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ரேஷன் கடைகளில் அனைத்து உணவுப் பொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், தொழிலாளர் மற்றும் பெண்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தாலுகா அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சுபா, சுலக்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.