×

மாயனூர் அருகே விபத்தில் இறந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் காந்திகிராமத்தில் பரபரப்பு

கரூர், டிச. 22: கருர் மாவட்டம் புலியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்(20). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டுள்ளார். ஆண்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கரூர் திருச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாயனூர் காவல் நிலையத்தில் பதிந்துள்ள வழக்கில், விபத்தில் இறந்த சதீஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே அந்த வழக்கினை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் நேற்று மதியம் கரூர் காந்திகிராமம் பிரதான சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வழக்கு விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்வதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Relatives ,accident ,Mayanur ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...