×

பாளை அண்ணா விளையாட்டு அரங்கு நுழைவுவாயில் தடுப்பில் கால்சிக்கி தவித்த வாலிபர்

நெல்லை, டிச. 21: பாளை அண்ணா  விளையாட்டு அரங்கு நுழைவுபகுதியில் உள்ள தடுப்பு குழாய்களுக்கு இடையே கால் சிக்கியநிலையில் பரிதவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பாளை என்ஜிஒ பி காலனி உதயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் (39). நெல்லையில் செயல்படும் நகை கடை ஒன்றில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், நேற்று பிற்பகல் தனது குழந்தைகளுடன் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு சென்றார்.

அப்போது விளையாட்டு அரங்கின் பிரதான நுழைவு பகுதியில் கால்நடைகள் உள்ளே செல்லாமல்  தடுப்பதற்காக இடைவெளியுடன் கூடிய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவரது வலது கால் சிக்கி முட்டுபகுதிவரை உள்ளே சென்றது. இருகுழாய்களுக்கு இடையே சிக்கிய அவரது காலை எடுக்கமுடியாமல் வலியால் பரிதவித்தார். அருகே இருந்தவர்கள் முயற்சி செய்தும் காலை மீட்கமுடியவில்லை.

இதையடுத்து இதுகுறித்து அண்ணா ஸ்டேடிய நிர்வாகிகள் அளித்த தகவலை அடுத்து பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜா தலைமையில் விரைந்துவந்த வீரர்கள் குழாய் பகுதியை வெல்டு செய்து வெட்டியெடுத்து அவரை பத்திரமாக மீட்டனர். சுமார் அரைமணி நேரம் தவித்த தமீமை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : block ,entrance ,Palai Anna Stadium ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு