கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் டேனியல் என்ற தமிழரசன் (31). பிரபல ரவுடியான இவர் மீது ஓட்டேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வண்டலூர் மேம்பாலத்தில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற பைக்கை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதில், பிடிபட்ட வரை ஓட்டேரி காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபல ரவுடி தமிழரசன் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து டேனியல் என்ற தமிழரசனை கைது செய்து நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பைக் மற்றும் 11 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.