கிருஷ்ணகிரி, டிச.21: கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மத்திய மாவட்ட இளைஞரணி மற்றும் ஊடக பிரிவு கலந்தாய்வு கூட்டம், மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ஷனாவுல்லா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அலி வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் ராயநல்லூர் கனல் கண்ணன், வடலூர் ஜோதிகுமரவேல், மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார், ஊடக பிரிவு செயல்பாட்டாளர் அன்பு சிற்றரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் தங்கம் சக்திவேல் நன்றி கூறினார்.