×

பொதுமக்கள் கோரிக்கை 3 ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிப்பு கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


புதுக்கோட்டை, டிச.21: தொடர்ந்து 3 ஆண்டுகளாக பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற மேடை கலைஞர்கள், அடுத்த ஆண்டும் பாதிக்கப்படாத வகையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் சமயத்திலும் நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கத்தின் 5வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகையா தலைமை வகித்தார். பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் மாநில செயலாளர் ‘ஆக்காட்டி’ ஆறுமுகம் பேசியதாவது: கடந்த 2018-ல் கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அந்த ஆண்டு எங்களது நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019 ல் மக்களவைத் தேர்தல், நிகழாண்டு கொரோனா பாதிப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகளாக கலைஞர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் கலைஞர்களில் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்த சுமார் 34 ஆயிரம் பேருக்கு மட்டுமே கஜா புயலின் போது தலா ரூ. 2000-மும், கரோனா பாதிப்புகாக தலா ரூ.2000 மும் நிவாரணமாக அரசு வழங்கியது. மொத்த கலைஞர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்டுள்ள அனைவரையும் நலவாரியத்தில் சேர்ப்பதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். மேலும், 2021-ல் தமிழகத்தில் கோயில்களில் திருவிழா நடைபெறும் சமயத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும். ஏற்கெனவே, நாங்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம். இனிமேல் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை. எனவே, இரவு ஒரு மணிவரை திருவிழாகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு அலுவலகம் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றார்.

Tags : temple festivals ,folk show ,
× RELATED கர்நாடகாவில் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து