சிதம்பரம், டிச. 21: சிதம்பரம் அருகே குளத்தில் கிடந்து பொதுமக்களை மிரட்டிய முதலையை வனத்துறையினர் பிடித்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள சி.கொத்தங்குடி கிழக்கு தெருவில் உள்ள குளத்தில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலை ஒன்று இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இந்த முதலை மக்களை மிரட்டி வந்தது. தகவலறிந்த சிதம்பரம் மற்றும் பிச்சாவரம் வனத்துறை அதிகாரிகள் இணைந்து முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மோட்டார் என்ஜின் மூலம் குளத்திலிருந்த தண்ணீர் இறைக்கப்பட்டது. பின்னர் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் வலையை விரித்து முதலையை பிடித்தனர். பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளமும், 50 கிலோ எடையும் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் இந்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.