×

பணம் கட்டியும் நகை தர மறுப்பு தனியார் அடகு நிறுவனத்தில் மக்கள் தர்ணா போராட்டம் அவனியாபுரம் அருகே பரபரப்பு

அவனியாபுரம், டிச.21:  அவனியாபுரம் அருகே பணம் கட்டியும் நகையை தர மறுத்த அடகு நிறுவனத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரம் அருகே பராசக்தி நகரில் தனியார் அடகு நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று காலை 10க்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் அடகு வைத்த நகையை மீட்க பணத்துடன் வந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஊழியர், பணத்தை மட்டும் கட்டி விட்டுச் செல்லுங்கள், நகையை ஒரு மாதம் கழித்து தருவோம் என கூறினர். இதையடுத்து ஊழியருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய மேலாளர் மகேஷ் என்பவர் அடகு வைத்த நகைகளின் பேரில் கூடுதலாக பணம் எடுத்து கையாடல் செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் எவ்வளவு பணம் எடுத்துச் சென்றார் என்று கணக்கிட்டு வருவதால் ஒரு மாதத்திற்குள் தங்களுடைய நகைகளை மீண்டும் தருவோம் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்க மறுத்து பொதுமக்கள் தனியார் நகை அடகு நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  அவர்களை சமாதானம் செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Avaniapuram ,
× RELATED சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான...