தர்மபுரி, செப்.13: தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்களே முக்கிய விவசாய பயிராக பயிரிடப்படுகிறது. மாவட்டம் முழுவதுமாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டி அள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலைகொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை, நிம்மாங்கரை, கன்னிப்பட்டி, பெரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் மஞ்சள் பயிர் பருவ மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை தர்மபுரி ஒன்றியத்தில் பரவலாக பெய்துள்ளது. தற்போது பல ஒன்றியங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இதேபோல் வடகிழக்கு பருவமழையும் எங்களுக்கு கைகொடுத்தால், நடப்பாண்டில் மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும்’ என்றனர்.
