விருதுநகர், டிச.18: விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் தனி அறையில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் கைகழுவும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்து செய்திட வேண்டும். மாணவர்களுக்கு புரோட்டீன் சத்துடன் கூடிய உணவுகள் வழங்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும். கல்லூரி சமையலறைகள் சுகாதாரமாகவும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாடங்கள் காணொலி காட்சி மூலமாக நடத்தலாம்.
பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதில் இடையூறு இருந்தால் மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.