கும்பகோணம், டிச. 18: கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டம் மூலம் வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் வங்கிகளில் கடனுதவி பெற இதுவரை விண்ணப்பிக்காத சாலையோர வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
அதன்படி வருகிற 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், மேலக்காவிரி நகராட்சி பள்ளி, ஏஎஸ்ஓ நகராட்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. கடனுதவி பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் இந்த சிறப்பு முகாமில் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.