×

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட இயக்கம் திமுகதான்

கரூர், டிச. 18: தமிழகத்தில் கொரனோ காலத்தில் சிறப்பாக செயல்பட்ட இயக்கம் திமுகதான் என்று கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி ஆகியோர் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இந்த நிகழ்வில், மாநில நெசவாளர்அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரகுநாதன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த அரசுக்கு செயல்வடிவம் கொடுப்பதே திமுக தலைவர்தான். கொரோனா காலங்களிலும், ஒவ்வொரு நிலையிலும் திமுக தலைவர் கூறும் கருத்துக்களைத்தான் இந்த அரசு செயல்படுத்துகிறது. கொரோனாவின்போது சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும் என சொன்னார். சட்டமன்றத்தை ஒத்தி வைக்க முடியாது என முதல்வர் கூறினார்.

இரண்டு முன்று நாட்களுக்கு பிறகு நிலையை உணர்ந்து சட்டமன்றத்தை ஒத்தி வைத்தனர். உள்ஒதுக்கீடு அறிவித்தபோது, திமுக சார்பில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அரசே செலுத்தும் என முதல்வர் அறிவித்தார். இப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும் திமுக தலைவர் என்ற சொல்கிறாரோ, அதைத்தான் இவர்கள் பின்னர் செயல்படுத்துகின்றனர். திமுக தலைவரின் அறிக்கையை செயல்படுத்தும் அரசாக இந்த அரசு உள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட இயக்கம் திமுகதான். உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு நிலைகளில் உதவியது திமுகதான். இந்த சமயத்தில்தான் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. எந்த அரசியல் கட்சிகளையும் சாராத லாரி உரிமையாளர்கள்தான் போக்குவரத்துதுறை குறித்து குறை கூறுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்ற பிறகுதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் முழுக்க முழுக்க மக்களை பாதிக்கக்கூடிய சட்டங்களாகும். இதை முதல்வர் நியாயப்படுத்தி பேசுகிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இடம் கரூர். புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் அமைக்கப்படவில்லை. ஆனால், வேறொரு இடத்தில் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது என்றார்.

Tags : DMK ,performing movement ,Corona ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி