×

ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்ககோரி ஆர்ப்பாட்டம்

பட்டாபிராம், டிச.18: பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.

மேலும், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பலியாகின்றனர். மேலும், மேம்பால பணியால் கனரக வாகனங்கள், லாரி, பஸ்,கார் உள்ளிட்டவைகள் பல கிலோமீட்டர் சுற்றி வர செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை.  

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்த கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெமிலிச்சேரி ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  இதில் மாவட்ட அவைத்தலைவர் பூவை.மு.பாபு தலைமை வகித்தார். முன்னதாக ஆவடி மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாநில நிர்வாகிகள் ரா.அருணாச்சலம், ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.வி.தனஞ்செழியன், எஸ்.கௌரிகுமார்,  சுஜாதா ஹேமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,completion ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்