பள்ளிப்பட்டு, டிச. 18: ஆர்.கே.பேட்டை வட்டார வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அடர் நடவு முறை பயிற்சி அளிக்கப்பட்டது.ஆர்.கே.பேட்டை வட்டார வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 முன் மாதிரி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு முறை குறித்த பயிற்சி அளிக்க ஓசூரில் உள்ள மாநில தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி மையம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதற்கு தேவையான ஏற்பாடுகளை வேளாணை உதவி இயக்குநரும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் செய்திருந்தார். தோட்டக்கலை மண்டல ஆராய்ச்சி நிலையம் தலைவர் பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விவசாயிகள் மாதம், ஆண்டு வருமானம் ஈட்டுவதற்கான தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் பூ, காய்கறி பழங்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைச்செல்வி, அனைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து கண்டுநர் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.