திருப்பூர், டிச.18: தமிழக மின்வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதால், நிரந்தர பணியாளர்களின் வேலை பறிபோகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மின்வாரியத்தில் 50 சதவீத பணியிடங்களை தனியாரிடம் வழங்க மின்வாரியம் ஒப்பந்தம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளதை எதிர்த்து தொ.மு.ச. சார்பில் அவசர வழக்குத் தொடர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக தொ.மு.ச. சார்பில் சட்ட அறிவிப்பு கடிதம் தமிழக தலைமை செயலர், எரிசக்தித்துறை செயலர், மின்வாரிய சேர்மன் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின் விநியோக வட்டங்களில் பணி ஒப்பந்தங்களை துணைப் பிரிவின் பராமரிப்புப் பணிகளை ஒற்றை தொகுப்பு மூலம் மூன்று வருட காலங்களுக்கு தனியாருக்கு மின்வாரியம் தற்போது தனிச்சையாக டெண்டர் வழங்கி உள்ளது. இது விதிகளின்படி முற்றிலும் தவறானது எனவே இதை உடனடியாக ரத்து கோரி தொ.மு.ச. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மின்வாரியத்தின் மீது வழக்கு தொடர மனு தாக்கல் செய்து அதற்கான பணிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதற்கான அறிவிப்புகளை மின்சார வாரியம் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது திடீரென்று தற்போதைய மின் விநியோகம் பகுதிகளிலுள்ள பணிகளை தனியாருக்கு விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் காலி பணியிடங்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது திடீரென்று மின்வாரியம் மின் விநியோக வட்டங்களில் மின் தடை சரிசெய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிவிப்பை மின் வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தற்போது மின் விநியோக வட்டங்களில் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விடப்பட்டதை உடனடியாக மின்வாரியம் திரும்ப பெற வேண்டும்.