×

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலை மீது புனிதநீர் தெளித்து பரிகார பூஜை

திருவண்ணாமலை, டிச.18: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையில், புனிதநீர் தெளித்து பரிகார பூஜை நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, கடந்த மாதம் 29ம்தேதி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 9ம்தேதி இரவுடன் நிறைவடைந்தது. தீபமலையில் மகாதீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும், மலை மீது செல்ல பக்தர்களுக்கு இந்த ஆண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் என பலரும் மலை மீது சென்றனர். மலையில் தீபம் காட்சியளித்த நாட்களில் பக்தர்கள் சிலரும் மலை மீது சென்று வழிபட்டனர். இறைவனின் திருமேனியாக வணங்கப்படும் மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறைவுருவான மலை மீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது.

எனவே, மகாதீபம் ஏற்றுவதற்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலை மீது சென்றதற்கான பரிகார வழிபாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, மலை மீது நேற்று புனிதநீர் தெளித்து பரிகார சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, உம்முடைய திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது சென்றோம், எங்களை பொறுத்தருள்க என வேண்டும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்சிதரும் அண்ணாமலையார் பாதம் மற்றும் மகாதீப கொப்பரை வைக்கப்படும் இடம் ஆகியவற்றில் புனிதநீர் தெளித்து பாலாபிசேகம் செய்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

Tags : hill ,Annamalaiyar ,Thiruvannamalai ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...