மதுரை, டிச.17: மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் பகுதியில் எஸ்ஐ மணிமாறன் தலைமையில் அண்ணாநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் ஒரு கும்பல் இருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கரும்பாலையை சேர்ந்த நாகமணி(26), சேர்வாரன் சின்னத்தம்பி(24), பிடி காலனியை சேர்ந்த சேதுமணி(18), மாடசாமி(22) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட திட்டம் தீட்டி பதுங்கியிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த 2 கத்திகள், மிளகாய் தூள் பாக்கெட்டுகள் மற்றும் கயிறு உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.