×

அய்யம்பாளையம்- சித்தையன்கோட்டை சாலையில் உலர் கள பணியால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி, டிச. 17: அய்யம்பாளையம்- சித்தையன்கோட்டை சாலையில் உலர்கள பணியால் வாகனஓட்டிகள், விவசாயிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, நரசிங்கபுரம், கதிர்நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர், ஒட்டுப்பட்டி பகுதகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டனர்.தொடர்ந்து பெய்த மழையால் இப்பயிர்கள் நல்ல விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணி துவங்கியுள்ளது. இங்கு சோளம், கம்பு போன்ற தானியங்களை கதிர்களில் இருந்து பிரித்தெடுக்க உலர் கள வசதிகள் இல்லை.

தானியங்களை இயந்திரம் கொண்டு பிரித்தெடுக்க அதிக செலவாகும் என்பதால் சிறு, குறு விவசாயிகள் அய்யம்பாளையம்- சித்தையன்கோட்டை மெயின்ரோட்டை கதிரடிக்கும் களமாக மாற்றி விட்டனர். இந்த ரோடு திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஆத்தூர், செம்பட்டி மற்றும் மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடிக்கு அதிகளவில் வாகன போக்குவரத்து நிறைந்த ரோடாகும். டூவீலர், கார், பஸ், லாரி வாகனங்கள் செல்லும் போது ஆபத்தை உணராமல் ரோட்டின் மைய பகுதியில் நின்று வேலை செய்கின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. தவிர கதிரிலிருந்து தானியங்களை பிரித்தெடுத்து சாக்குகளில் நிரப்பும் பணிகளும் ரோட்டில்தான் நடக்கின்றது.

இதுமட்டுமின்றி தானியங்கள் பிரித்துதெடுக்கப்பட்ட கதிர்களை ரோட்டின் அருகாமையில் வைத்து தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ரோடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.மேலும் சோளம் வழுக்கும் தன்னையுடையதாக இருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் வேகமாக செல்லும் போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கும், வாகனஓட்டிகளுக்கும் வீண் வாக்குவாதம் ஏற்படுகின்றது.எனவே விவசாயிகளுக்கு மானாவரி விவசாய பயிர்களை உலர வைத்து காய வைக்க உலர்களமும், கதிர்களிலிருந்து சோளஅரிசியை பிரித்தெடுக்கும் இயந்திர வசதியும் விவசாய துறை சார்பில் அரசு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,road ,Ayyampalayam-Sithayankottai ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...