உடன்குடி, டிச. 17: உடன்குடி அனல்மின்நிலைய ஊழியர்கள் 5பேர் உட்பட 6 பேருக்கு நேற்று ஓரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் அனல்மின்நிலைய வளாகத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடன்குடி கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம், துறைமுகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோய் தாக்கம் தீவிரமாக இருந்த போது ஏராளமான வடமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்பினர். தற்போது மத்திய, மாநில அரசுகள் கடும் ஊரடங்குக்கு பின்னர் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில் அனல்மின்நிலைய வளாகத்தில் பணியாற்றும் 37, 55, 42, 32, 45வயது வடமாநில தொழிலாளர்கள், சுந்தரபுரத்தைச் சேர்ந்த 72வயது முதியவர் உள்ளிட்ட 6பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் சுகாதாரத்துறையினர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி
நாசினிதெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனல் மின்நிலைய வளாக பகுதியில் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.