ஊத்துக்கோட்டை; பெரியபாளையம் அருகே திருட்டு பழி சுமத்திய தனியார் கம்பெனி நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், 90 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் மதுரவாசல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சோப்பு, ஷாம்பு தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100 நிரந்தர தொழிலாளர்களும், 500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். உலகம் முழுவதும் நிறுவனத்தை நடத்தும், இந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேமித்து வைக்கும் பொருட்களை அதிகாரிகளே திருடி விட்டு அந்த பழியை தொழிலாளர்கள் மீது போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 141 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 141 பேரும் மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நேற்றும் திடீரென கம்பெனி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.