×

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை 150 ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன வழக்கம் புதுப்பிப்பு

திருச்சி, டிச.16: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மார்கழி மாத சீர்வரிசை நேற்றிரவு வழங்கப்பட்டது. திருச்சி சமயபுரம் மாரியம்மன், ரங்கம் ரங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ரங்கம் கோயில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் திருவானைக்காவலில் அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரியும் ரங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோயிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன.

அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர இரு கோயில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று (16ம் தேதி) மார்கழி மாதம் பிறப்பதால் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பாளர் பழனிசாமி மற்றும் ஊழியர்கள் திருவானைக்காவல் கோயிலுக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர். திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் பண்டிதர்கள், அகிலாண்டேஸ்வரி சன்னதி கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நைவேத்தியத்துடன் இன்று (16ம் தேதி) காலை பூஜைகள் நடைபெறும். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரங்கநாதர் கோயில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாரதனை நடைபெறும்.

Tags : Aurangam Ranganathar ,Thiruvanaikaval Akilandeswari ,
× RELATED விதவிதமாய் விநாயகர்