நாமக்கல், டிச. 15: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், நேற்று அளித்த கோரிக்கை மனு விபரம்: தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி, கணினி அறிவியல், தையல், இசை ஆசிரியர்கள் ₹5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது, 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 9 ஆண்டாக மே மாதம் சம்பளம் இல்லை. போனஸ், பண்டிகை கால முன்பணம், 7 வது ஊதியக்குழு, 30 சதவீதம் ஊதிய உயர்வு, மகப்பேறு, மருத்துவம் விடுப்பு, இதுவரை வழங்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில், பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில், பகுதிநேர பணியாளர்கள் நிரந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பநலனை காக்கும் வகையில் முழுநேர வேலையுடன், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.