×

பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏரியை கையகப்படுத்துவதை எதிர்த்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காளி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ள 5,747 ஏக்கர் பரப்பில் 26.54 சதவீதம் நீர்நிலைகளாகும். ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காளி ஏரியை மட்டும் நம்பியுள்ளனர். வருவாய் துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது எனவும், ஏகனாபுரம் ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சபிக், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், பொதுநல வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : High Court ,Paranthur airport ,Chennai ,Paranthur ,Sriperumbudur taluka ,Kanchipuram district ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...